பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்குரங்கணில்முட்டம்
வ.எண் பாடல்
1

விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

2

விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

3

சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,
காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

4

வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-
தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

5

இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,
கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.

6

பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

7

மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

8

மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.

9

வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

10

கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,
வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!
குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.

11

கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.