பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும், நெல்வெணெய் மேவிய நீரே; நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும் சொல் வணம் இடுவது சொல்லே.
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க் கச்சு இள அரவு அசைத்தீரே; கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர் அச்சமொடு அருவினை இலரே.
நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரை விரி கோவணத்தீரே; அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு உரை விரிப்போர் உயர்ந்தோரே.
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய ஊர் மல்கி உறைய வல்லீரே; ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல் பார் மல்கு புகழவர் பண்பே!
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய ஆடு இளம் பாப்பு அசைத்தீரே! ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு பாடு உளம் உடையவர் பண்பே!
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய பெற்றி கொள் பிறை நுதலீரே; பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல் கற்று அறிவோர்கள் தம் கடனே
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய கறை அணி மிடறு உடையீரே; கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர் உறைவதும் உம் அடிக்கீழே.
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று அரக்கனை அசைவு செய்தீரே; அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து இருக்க வல்லார் இடர் இலரே.
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று இருவரை இடர்கள் செய்தீரே; இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு பரவ வல்லார் பழி இலரே.
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண் கெடுத்தீரே; சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே.
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை, நலம் மல்கு ஞானசம்பந்தன் நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் துயர் இலரே.