பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவேட்களம்
வ.எண் பாடல்
1

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

2

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.

3

வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

4

அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை-
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!

5

துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி
நம்பன் ஆகிய நல் மணிகண்டனார்,
என் பொனார், உறை வேட்கள நன்நகர்
இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.

6

கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

7

வட்ட மென் முலையாள் உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,
சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!

8

நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினைமினோ-
வட்டவார் முலையாள் உமை பங்கனார்,
சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!

9

வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.

10

சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!