பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவேற்காடு
வ.எண் பாடல்
1

ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

2

ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

3

பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

4

ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

5

காட்டினானும், அயர்த்திடக் காலனை
வீட்டினான், உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார், வினை ஒல்லையே.

6

தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

7

மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர், தீர்க்கமே.

8

மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

9

பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற் காட்டூர்,
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே!

10

மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

11

விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.