பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம் ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே.
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும் கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம் வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று, கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு, கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி, மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று, தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம் ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.