பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
பொது
வ.எண் பாடல்
1

“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது
அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

2

காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று, இருபொழுதும்,
வினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

3

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்!
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

4

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

5

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

6

மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

9

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!

10

சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
க்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

11

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.