பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
காரைக்காலம்மையார் / மூத்த திருப்பதிகம்
வ.எண் பாடல்
1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்

தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி

அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

2

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

விள்ள எழுதி, வெடுவெ டென்ன
நக்கு, வெருண்டு விலங்கு பார்த்துத்

துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிட முற்றும் சுளிந்து பூழ்தி

அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.

3

வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப,
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே

கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி

ஈசை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே

ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

4

குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன, ‘அதனை முன்னே

கண்டிலம் என்று கனன்று பேய்கள்
கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா

மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்

அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

5

விழுது நிணத்தை விழுங்க விட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா(து)

அழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

6

பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு, கூகை, பகண்டை, ஆந்தை

குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்

பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே

அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

7

சுழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்

தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான்தடி தின்றணங் காடு காட்டில்,
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்

அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

8

நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்

காடும், கடலும், மலையம், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கை யேந்தி

ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

9


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்

உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை,

மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

10

புந்தி கலங்கி, மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்

சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா

முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,

அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

11


ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,

ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்க லித்து,

பப்பினை யிட்டுப் பகண்டை பாட,

பாடிருந் தந்நரி யாழ மைப்ப,

அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்

அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்

செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்

சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.