பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பாசூர்
வ.எண் பாடல்
1

சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

2

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், "பெம்மான்" என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

3

கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

4

பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

5

ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

6

கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

7

கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

8

தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

9

நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

10

தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

11

ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.