பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!
இகழும் காலன் இதயத்தும், என் உளும், திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம் புகழும் பூமகளும் புணர் பூசுரர் நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!
பரந்த நீலப் படர் எரி வல்விடம் கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம் சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!
தவந்த என்பும், தவளப்பொடியுமே, உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம் சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும் நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
இலங்கை வேந்தன் இருபது தோள் இற, விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம் சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம் செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்- நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!
கலவு சீவரத்தார், கையில் உண்பவர் குலவமாட்டாக் குழகன் உறைவு இடம் சுலவு மா மதிலும், சுதை மாடமும், நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை, தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார் மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.