பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநொடித்தான்மலை
வ.எண் பாடல்
1

தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து,
வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்)
ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.

2

ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ-
ஊனை உயிர் வெருட்டீ ஒள்ளியானை நினைத்திருந்தேன்,
வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க
ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?

3

மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்த-
தும் தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.

4

வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு,
ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம்
சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

5

மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்;
விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.

6

அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா
வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே!
துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

7

நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய,
மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே,
அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச,
உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.

8

அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள்,
விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப,
வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர்
சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

9

இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம்
வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மா முனிவர், “இவன் ஆர்?” என,-எம்பெருமான்
“நம்தமர் ஊரன்” என்றான்நொடித்தான்மலை உத்தமனே.

10

ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!