பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஎருக்கத்தம்புலியூர்
வ.எண் பாடல்
1

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

2

இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,
நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த
சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்
கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

3

“விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!
பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா!” என வல்லார்க்கு அடையா, வினைதானே.

4

அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

5

வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து,
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்,
ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா, வினைதானே.

6

நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.

7

“ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு,
“தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

8

“மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான்!”எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே. உரை

9

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி,
சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும்
நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய
அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே.

10

ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,
சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.