பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும் நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும் காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு; குறள் ஆமை பூண வல்லான்; புரிசடைமேல் ஒர் புனல், கொன்றை, பேண வல்லான்; பெண் மகள் தன்னை ஒருபாகம் காண வல்லான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை- தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம் இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர் உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின் நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி; பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும், தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம் மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக் கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர் காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை, நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.