பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம் விட்டபோதின்கண், இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே! குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள் விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ! குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ் செய் கோவலூர், விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே.
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்! அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள் அழுந்தாதே, கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள் வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும், இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன், பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர், வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே.
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின் கண்; துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே! வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே.
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும், ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது அன்றியும், கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே.
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின் கண், நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால், வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே.
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல், போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள், வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள் நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே.
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும், அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது அறிதிரேல், பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனில், வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே.
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன், பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால், அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண் கோவலூர்தனில், விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.