பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி, பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு, தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து, திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே.
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க, கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய, “என்னைக் கிளி மதியாது” என எடுத்துக் கவண் ஒலிப்ப, தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச் செவ்வே திரிந்து, “ஆயோ!” எனப் போகாவிட, விளிந்து, கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச் செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே.
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய, தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி, மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி, தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.
“மாற்றுக் களிறு அடைந்தாய்” என்று மதவேழம் கை எடுத்து, மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய, “தூற்றத் தரிக்கில்லேன்” என்று சொல்லி(ய்) அயல் அறியத் தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே.
“அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்; எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ? இப்போது உமக்கு இதுவே தொழில்” என்று ஓடி, அக் கிளியைச் செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்; கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத் திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே.
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற, ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும், மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம், தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார் ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.