பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆமாத்தூர்
வ.எண் பாடல்
1

காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.

2

பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான்
தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை,
கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.

3

காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை;
பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை;
ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார்,
ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.

4

ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்,
சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு;
சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை;
ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.

5

வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை;
சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை;
நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்;
அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.

6

காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;
நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே;
ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்;
பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.

7

எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு;
கண் அவன் கண் அவன், “காண்டும்” என்பார் அவர் தங்கட்கு;
பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்;
அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.

8

பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
“என்னவன் என்னவன்!” என் மனத்து இன்புற்று இருப்பனே.

9

தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;
நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்;
மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.

10

உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்
பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல;
அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்-
பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.

11

ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை,
மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல்
பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.