பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால் வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக் கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே, வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம் கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர், "எந்தைபெம்மான்!" என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக் கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள் எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால் பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய், கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே.
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால், "வாழி, எந்தை!" என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய, கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல் தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால் ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும் கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே.
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ, தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல் அறைகள் மேல் கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே.
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால் வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை, மேல் கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர் தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக் கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே.
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர், இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளைக் கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான், ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர், வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.