பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள் நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்; நண்ணும் இடம் ஆம் ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர் வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா மலர்கள் தூய், கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே.
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி, ஆல நிழல்வாய், மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம் துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக் குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே.
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல் அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன் தன் இடம் ஆம் மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள், கேழல், களிறு, கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ் கோகரணமே.
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி, வன்னி, முடியின் சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்ற பதி ஆம் படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி, குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு கோகரணமே.
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய, ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக் கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு, கோகரணமே.
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்; அக்கு அரைமிசை பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக, கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே.
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற, விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல் குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே.
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும், வேதமுதலோன், இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர் எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக் கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர், கோகரணமே.
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம் பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை, கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே.
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்- நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய் ஞானசம்பந்தன்-மொழிகள் பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.