பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே .
மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி, முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர் அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச் செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால், மந்தி பல மா நடம் ஆடும், துறையூர் எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி, சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர் விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி, நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர் வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய, மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர் அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .