பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்; கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை அண்டனார், அருள் ஈயும் அன்பரே.
நீதியார், நினைந்து ஆய நால்மறை ஓதியாரொடும் கூடலார், குழைக் காதினார் கருவூருள் ஆன்நிலை ஆதியார், அடியார்தம் அன்பரே.
விண் உலாம் மதி சூடி, வேதமே பண் உளார், பரம் ஆய பண்பினர், கண் உளார் கருவூருள் ஆன்நிலை அண்ணலார், அடியார்க்கு நல்லரே.
முடியர், மும்மதயானை ஈருரி; பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர் கடிஉளார் கருவூருள் ஆன்நிலை அடிகள், யாவையும் ஆய ஈசரே.
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர் மங்கையர், மணிநீலகண்டர், வான் கங்கையர் கருவூருள் ஆன்நிலை, அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில் மேவர், மும்மதில் எய்த வில்லியர், காவலார் கருவூருள் ஆன்நிலை, மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப் பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர், கண்ணினார், கருவூருள் ஆன்நிலை நண்ணினார், நமை ஆளும் நாதரே.
கடுத்த வாள் அரக்கன், கயிலையை எடுத்தவன், தலை தோளும் தாளினால் அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை, கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால், தொழுது மா மலரோனும், காண்கிலார் கழுதினான், கருவூருள் ஆன்நிலை முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.
புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப் பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப் பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம் பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர், சிந்தையில் துயர் ஆய தீர்வரே.