பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே! "ஆவா!" என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி, மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை, மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு, முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம், தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை, பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த, மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.
தெரிந்த அடியார், "சிவனே!" என்று திசைதோறும், குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி, இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர், முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம் சித்தம் நைந்து, "சிவனே!" என்பார் சிந்தையார்; கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும் முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே.
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தம் மலர் தூவி, "நம்பா!" என்ன, நல்கும் பெருமான் உறை கோயில் கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும் மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த, மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும், சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட, முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே நின்று உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில் திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி முருகின் பணைமேல் இருந்து நடம் செய் முதுகுன்றே.
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன், முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள், பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.