பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல் கங்கை, கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி, வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி, வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய் போர்த்த ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம்; ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென் கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்; சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து, அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.
மிக்க காலனை வீட்டி, மெய் கெடக் காமனை விழித்து புக்க ஊர் இடு பிச்சை உண்பது, பொன் திகழ் கொன்றை, தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து, ஆமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி, தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது துரந்து வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன்; மாமறை ஓதி; ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக, பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய, கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு, அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன் கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி, பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு, அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.
குறிய மாண் உரு ஆகிக் குவலயம் அளந்தவன் தானும், வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும், செறிவு ஒணா வகை எங்கும் தேடியும், திருவடி காண அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே.
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியைப் பறித்துத் திரளை(க்) கையில் உண்பவரும், தேரரும், சொல்லிய தேறேல்! பொருளை, பொய் இலி மெய் எம் நாதனை, பொன் அடி வணங்கும் அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும், சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த, வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.