பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவக்கரை
வ.எண் பாடல்
1

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண்
அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

2

பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா
ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில்
தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி
செப்புதுமே.

3

“சந்திரசேகரனே, அருளாய்!” என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.

4

நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும்
கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்;
மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின்,
மேல்;
மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே.

5

ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து
கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல
மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்,
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

6

கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன்,
பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல்
பான்மையனே.

7

கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள
தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்-
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்;
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே

8

இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த
வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.

9

காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப,
“சேமமே, உன் தனக்கு!” என்று அருள் செய்தவன்;
தேவர்பிரான்;
சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த
வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.

10

மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்
தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்;
பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம்
வக்கரையே.

11

தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை
வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று
அறுமே.