பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை; ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள் ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்- காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர் ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின், ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி! நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்- மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான் மற்றையாரொடு வானவரும் தொழ ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்- மாது தாழ்சடை வைத்த மணாளனார்; ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும், கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும், உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர் நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று; ஒன்று போலும் உதைத்துக் களைந்தது; ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று; ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர், சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர், உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர் அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம், திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர், உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.