பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பறியலூர்வீரட்டம்
வ.எண் பாடல்
1

கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-
திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

2

மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன்,
பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்-
திருந்து மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.

3

குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்-
தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

4

பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்-
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்,
விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.

5

கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி,
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

6

அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,
செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

7

நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான்,
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்-
திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில்,
விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

8

வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில்,
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.

9

வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன்,
துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்-
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.

10

சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;
உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;
விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

12

நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,
வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு
அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.