பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கச்சியேகம்பம்
வ.எண் பாடல்
1

வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடம் கெடுமே.

2

வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

3

வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,
பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

4

தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,
காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,
மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

5

தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,
பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,
வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

6

சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய் எய்து,
ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

9

பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,
அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,
கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.

10

குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!
விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.

11

ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.