பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள், பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே, முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம், புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர், மேல் பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான், வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து, வெறி செய்த பின் அருளி ஆகத்திடை வைத்ததுவும்(ம்) அழகு ஆகவே.
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம் போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள் ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன் போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள், பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்) மணல் கானல்வாய்ப் புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள் குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே.
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச் சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ, பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள் அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே!
வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்) இடை ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான், பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள் முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன், தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத் திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும், எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின் புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம் பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள் சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல், வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.