பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆமாத்தூர்
வ.எண் பாடல்
1

மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

2

சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.

3

காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,
போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்;
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும்,
தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.

4

பஞ்ச பூதவலையில் படுவதற்கு
அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும்,
வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!

5

குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,
அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை,
நிராமயன் தனை, நாளும் நினைமினே!

6

பித்தனை, பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்,
பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!

7

நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை
கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.

8

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!

9

குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்-
கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!

10

வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

11

விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி
அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர்
இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.