பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முந்தி மூ எயில் எய்த முதல்வனார், சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார், அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்- பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார், தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார், கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர், படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே.
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார், காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர், பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே.
வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல் ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார், நெற்றிக்கண்ணினர், நீள் அரவம் தனைப் பற்றி ஆட்டுவர்-பாசூர் அடிகளே.
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால் இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்,- துட்டரேல், அறியேன், இவர் சூழ்ச்சிமை;- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம் எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,- சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்! பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,- எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர் இட்டமா அறியேன், இவர் செய்வன- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர், காதில் வெண் குழை வைத்த கபாலியார், நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்- பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர், ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார், தேம்பல் வெண்மதி சூடுவர், தீயது ஓர் பாம்பும் ஆட்டுவர்-பாசூர் அடிகளே.
மாலினோடு மறையவன் தானும் ஆய், மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்; ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப் பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால் எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்; பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.