பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பாசூர்
வ.எண் பாடல்
1

முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

2

மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்,
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்,
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்,
படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே.

3

நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்,
காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர்,
பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே.

4

வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல்
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார்,
நெற்றிக்கண்ணினர், நீள் அரவம் தனைப்
பற்றி ஆட்டுவர்-பாசூர் அடிகளே.

5

மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்,-
துட்டரேல், அறியேன், இவர் சூழ்ச்சிமை;-
பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.

6

பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,-
சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்!
பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.

7

கட்டிவிட்ட சடையர், கபாலியர்,-
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர்
இட்டமா அறியேன், இவர் செய்வன-
பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.

8

வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்,
காதில் வெண் குழை வைத்த கபாலியார்,
நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்-
பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.

9

சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர்,
ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார்,
தேம்பல் வெண்மதி சூடுவர், தீயது ஓர்
பாம்பும் ஆட்டுவர்-பாசூர் அடிகளே.

10

மாலினோடு மறையவன் தானும் ஆய்,
மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்;
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப்
பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.

11

திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்;
பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.