பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கேதாரம்
வ.எண் பாடல்
1

வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்;
தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!

2

பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்;
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே?
அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு,
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே!

3

கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி,
“நம்பன் நமை ஆள்வான்” என்று, நடுநாளையும் பகலும்;
கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி,
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

4

உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்;
“வழக்கே?” எனில், “பிழைக்கேம்” என்பர், மதி மாந்திய மாந்தர்;
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்!
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே!

5

வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி,
ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே;
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!

6

தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே?
குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி,
தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக
கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே!

7

பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர,
கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய,
மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய,
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!

8

முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து,
துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி,
வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக்
கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

9

பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்;
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்;
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக்
கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!

10

நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.