பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச் சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய் சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத் தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா, ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி; அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி; களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார் விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை; பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல் உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே, அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாது உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப, சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும் சோமனையும்; அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு இலங்க, உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே, கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா, பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல் அம்பு ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி-தோல் சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க, தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு மால்வரைக்கீழ் ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி, தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து, பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார் ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக் கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ் உலகும் ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை, சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார் விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.