பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே! உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்! கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்! செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே! மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே! செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் ஐயா!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே! மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே! தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில் அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல் எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ் திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும் அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்; ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும் சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும் ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும் கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்! தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும், நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே! செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்! திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை, சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல், குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.