பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி, அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.
தீது அவை செய்து தீவினை வீழாதே, காதல் செய்து கருத்தினில் நின்ற நல் மா தவர் பயில் மாற்பேறு கைதொழப் போதுமின்! வினை ஆயின போகுமே.
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன், வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு- வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர் வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு கண்டு கைதொழ, தீரும், கவலையே.
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும் வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே.
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப் பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம் மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆள் உடையார்களே.
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங் காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்- மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு பாடுவார் பெறுவார், பரலோகமே.
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால் எடுத்தானைத் தகரவே வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய், வினை போய் அற! கச்ச மா விடம் உண்ட கண்டா! என, வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்; பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.
ஈட்டும் மா நிதி சால இழக்கினும், வீட்டும் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்; செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
உந்திச் சென்று மலையை எடுத்தவன் சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என, அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.