பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆலங்காடு
வ.எண் பாடல்
1

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

2

மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே;
வானோர் வணங்கப்படுவார் தாமே;
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
“சரண்” என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

3

ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல்
பெருமை உடையார் தாமே;
பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப்
பொருள் ஆகி நின்றார் தாமே;
பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

4

நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு
ஆறு அங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம்
செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

5

அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும்
சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே;
தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6

தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே;
தூ நீறு அணியும் சுவண்டர் தாமே;
தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு
ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;
பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

7

மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில்
ஆடல் மகிழ்ந்தார் தாமே;
ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும்,
கோயிலாக் கொண்டார் தாமே;
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

8

விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே;
மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;
காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

9

கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே;
கயிலை மலையை உடையார் தாமே;
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே;
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;
பாரார் புகழப்படுவார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

10

மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;
வண் கயிலை மா மலையை வந்தியாத,
நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை
நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.