பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில் கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர், இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்; பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல் மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும் தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன் தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார் மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார், நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும் தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி, கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப் போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும் மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்; எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்; கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக் கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம் பூநாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம் பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி, காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர், பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய், எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன், கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல், தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல் வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.