பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர், அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்! பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும், வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர், மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும், மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து, அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று, எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல், வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன் வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை, வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை, தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்; பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல், வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக் குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர், சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர், வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய், பாதி பெண் உருஆய பரமன் என்று ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர் வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில், வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச் சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்; ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும், வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.