பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமாற்பேறு
வ.எண் பாடல்
1

பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு
ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை;
ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு,
அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை;
கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை;
கருதுவார் மனத்தானை; காலற் செற்ற
சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

2

விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி,
விண்ணோடு மண் ஆகி, விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளை ஆகி, சோதி ஆகி,
தூண்ட(அ)ரிய சுடர் ஆகி, துளக்கு இல் வான் மேல்
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு
ஒலி நீர்க்கங்கையொடு மூவாது என்றும்
திளைக்கின்ற சடையானை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே."

3

மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை,
மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக்
கலை நிலவு கையானை, கம்பன் தன்னை, காண்பு
இனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை,
விலை பெரிய வெண் நீற்று மேனியானை,
மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை,
சிலை நிலவு கரத்தானை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

4

உற்றானை, உடல் தனக்கு ஓர் உயிர் ஆனானை,
ஓங்காரத்து ஒருவனை, அங்கு உமை ஓர்பாகம்
பெற்றானை, பிஞ்ஞகனை, பிறவாதானை,
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானை, கற்பனவும் தானே ஆய கச்சி
ஏகம்பனை, காலன் வீழச்
செற்றானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

5

நீறு ஆகி, நீறு உமிழும் நெருப்பும் ஆகி, நினைவு
ஆகி, நினைவு இனிய மலையான் மங்கை
கூறு ஆகி, கூற்று ஆகி, கோளும் ஆகி, குணம்
ஆகி, குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம்
பொறுத்து அருளி, அவர்மேல் என்றும்
சீறாத பெருமானை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

6

மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை,
மறப்பு இலியை, மதி ஏந்து சடையான் தன்னை,
உரு நிலவும் ஒண்சுடரை, உம்பரானை, உரைப்பு
இனிய தவத்தானை, உலகின் வித்தை,
கரு நிலவு கண்டனை, காளத்தி(ய்)யை, கருதுவார்
மனத்தானை, கல்விதன்னை,
செரு நிலவு படையானை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

7

பிறப்பானை, பிறவாத பெருமையானை, பெரியானை,
அரியானை, பெண் ஆண் ஆய
நிறத்தானை, நின் மலனை, நினையாதாரை
நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை,
அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை,
அண்ணல் தனை, நண்ண(அ)ரிய அமரர் ஏத்தும்
திறத்தானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

8

வானகத்தில் வளர் முகிலை, மதியம் தன்னை,
வணங்குவார் மனத்தானை, வடிவு ஆர் பொன்னை,
ஊன் அகத்தில் உறுதுணையை, உலவாதானை,
ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றை,
கானகத்துக் கருங்களிற்றை, காளத்தி(ய்)யை,
கருதுவார் கருத்தானை, கருவை, மூலத்
தேன் அகத்தில் இன்சுவையை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

9

முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை;
முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும்
பற்று ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை;
பராபரனை; பரஞ்சுடரை; பரிவோர் நெஞ்சில்
உற்றானை; உயர் கருப்புச் சிலையோன் நீறு ஆய்
ஒள் அழல்வாய் வேவ உறும் நோக்கத்தானை;
செற்றானை, திரிபுரங்கள்; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

10

விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்;
வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா
நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை
தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள்
புரம்மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.