பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்காளத்தி
வ.எண் பாடல்
1

செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

2

இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே!
கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்!
உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள்
அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

3

படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே!
விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்!
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்!
உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே .

4

மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே!
குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்;
நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

5

செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி,
நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால்,
துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்!
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

6

பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்;
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே!
மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என்
ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

7

கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள்
குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா!
முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்!
அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .

8

நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக்
கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே!
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்!
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .

9

தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி,
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்!
களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த
ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .

10

கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .