பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமாகறல் - திருவிராகம்
வ.எண் பாடல்
1

விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல்
அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல்
உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி
செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள்
தீரும், உடனே.

2

கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின்
எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி
மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன்
சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை
அகலும், மிகவே.

3

காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு
சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல்
உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா,
அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும்,
உடனே.

4

இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில்
மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல்
உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி
செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

5

துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார்
கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன்,
வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா,
வினைகளே

6

மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன்
ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு
மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு
திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல்
எளிதே.

7

வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும்
மேல்வினைகள் வீட்டல் உறுவீா
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல்
உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையில் மேலது உரி-தோல் உடைய மேனி
அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும்,
மிகவே.

8

தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன்
மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
“பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு
ஆர்
பூசு பொடி ஈசன்!” என ஏத்த, வினை நிற்றல் இல, போகும்,
உடனே.

9

தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது
உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற
பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது
எளிதே.

10

காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு
காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல்
உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன்
ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா,
வினைகளே.

11

கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி
காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு
சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான்
அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
ஒல்கும், உடனே.