பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான், கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே .
அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர் தண்டந் தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே .
மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர் கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே .
தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி, பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை, பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே .
குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறன் ஆம், மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக் கிழவன்-கீழை வழி, பழையாறு, கிழையமும், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே .
தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம் என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே .
ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம், சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே .
நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர், நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம், காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர், வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே .
தழலும் மேனியன், தையல் ஓர்பாகம் அமர்ந்தவன், தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை கழலும் கோவை உடையவன், காதலிக்கும்(ம்) இடம் பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கையே .
மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர் செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே .
பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை, ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை, நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல் பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே .
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்- கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
இட்டிது ஆக வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! கட்டி வாழ்வது நாகமோ? சடை மேலும் நாறு கரந்தையோ? பட்டி ஏறு உகந்து ஏறரோ? படு வெண்தலைப் பலி கொண்டு வந்து அட்டி ஆளவும் கிற்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! குன்றி போல்வது ஒர் உருவரோ? குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ? இன்றியே இலர் ஆவரோ? அன்றி உடையராய் இலர் ஆவரோ? அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ? வெள்ளை நீற்றரோ? பால் நெய் ஆடலும் பயில்வரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ? மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை நங்கையை அஞ்ச, ஓர் ஆனை ஈர் உரி போர்ப்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
கோணல் மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர் கழலரோ? வீணை தான் அவர் கருவியோ? விடை ஏறு வேத முதல்வரோ? நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ? நலம் ஆர்தர ஆணை ஆக நம் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்! வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ? புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ? அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! கையில் சூலம் அது உடையரோ? கரிகாடரோ? கறைக் கண்டரோ? வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ? விடை ஏறரோ? கடைதோறும் சென்று ஐயம் கொள்ளும் அவ் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
நீடு வாழ் பதி உடையரோ? அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ? பாடுவாரையும் உடையரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ? காடு தான் அரங்கு ஆகவே, கைகள் எட்டினோடு இலயம் பட, ஆடுவார் எனப்படுவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
நமண நந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று இவர் குமணமாமலைக் குன்று போல் நின்று, தங்கள் கூறை ஒன்று இன்றியே, “ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம்” என்று ஓதி யாரையும் நாண் இலா அமணரால் பழிப்பு உடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்! வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன், செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்; சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்; சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்; முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்; அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்; என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன், அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; “கடிப்பதும் ஏறும்” என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி- நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள் கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்- ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை, ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை; சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை, வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள் எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச் சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை, பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
வேய் அன தோளி மலை மகளை விரும்பிய மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை, ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும், “பேயனே! பித்தனே!” என்பரால், எம்பிரானையே!
“இறைவன்!” என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய், துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்; மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்- பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்; ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்; ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப் பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்; வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால் எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள் பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்- கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து, ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான், ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா! மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா! சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக் கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே!
நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே! மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே! மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே! இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே! கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே! பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே! பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாரூர் அம்மானே!
மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே! அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே! கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே! பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே! நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே! பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்! வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே! ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே! ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா! பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்; திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா! பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே! வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ! கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி, மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி- தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி, கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி, செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால் எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம் அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்- தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; “தாதை” என்று உன் சரண் பணிந்து ஏத்தும் எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம் அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம் புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
ஊறும் நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம், கூறும் நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும் சீறும் நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும் ஏறும் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
“குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில் பற்றும் நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி” எனப் பாடுதல் அல்லால் மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம் எற்றும் நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள் தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம் தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்? முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி; வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார் அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற, இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
“காண்டும், நம்பி கழல் சேவடி” என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத் தீண்டும் நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி ஈண்டும் நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் பெருக்கும் நம்பி; பெருகக் கருத்தா.. .