பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவொற்றியூர்
வ.எண் பாடல்
1

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

2

வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

3

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

4

காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

5

சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.

6

ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

7

பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

8

பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

9

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

10

வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவொற்றியூர்
வ.எண் பாடல்
1

ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!

2

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி,
சினம் எனும் சரங்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவொற்றியூர்
வ.எண் பாடல்
1

செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

2

சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!

3

பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!

4

தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.

5

வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!

6

புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

7

இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே!

8

சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!

9

சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?

10

அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

11

தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!