பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கச்சி ஏகம்பம்
வ.எண் பாடல்
1

கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண்,
குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண்,
காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும்
மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண்,
நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

2

பரந்தவன் காண், பல் உயிர்கள் ஆகி எங்கும்;
பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன் காண்; தூ மலர் அம் கண்ணியான் காண்;
தோற்றம், நிலை, இறுதி, பொருள் ஆய் வந்த
மருந்து அவன் காண்; வையகங்கள் பொறை தீர்ப்பான்
காண்; மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

3

நீற்றவன் காண்; நீர் ஆகித் தீ ஆனான் காண்; நிறை
மழுவும், தமருகமும், எரியும், கையில்-
தோற்றவன் காண்; தோற்றக் கேடு இல்லாதான் காண்;
துணை இலி காண்; துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண்; புகழ்கள் தமைப் படைத்தான் தான்
காண்; பொறி அரவும், விரிசடை மேல், புனலும் கங்கை
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

4

தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத்
தத்துவன் காண்; “மலை மங்கை பங்கா!” என்பார்
வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண்,
வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத்
திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

5

அடுத்த ஆனை உரித்தான் காண்.
*****************************
*************************
****************************
********************************

6

அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்;
ஐயாறும் இடை மருதும் ஆள்வான் தான் காண்;
பழித்தவன் காண், அடையாரை; அடைவார் தங்கள்
பற்று அவன் காண்; புற்று அரவம் நாணினான் காண்;
சுழித்தவன் காண், முடிக் கங்கை; அடியே போற்றும்
தூய மா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

7

அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல் பேணி;
அழல் வண்ணத்தில்(ல்) அடியும் முடியும் தேடப்
பசைந்தவன் காண்; பேய்க் கணங்கள் பரவி ஏத்தும்
பான்மையன் காண்; பரவி நினைந்து எழுவார் தம்பால்
கசிந்தவன் காண்; கரியின் உரி போர்த்தான் தான்
காண்; கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

8

முடித்தவன் காண்; வன்கூற்றை; சீற்றத் தீயால்
வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன் காண்; பிஞ்ஞகன் ஆம் வேடத்தான்
காண்; பிணையல் வெறி கமழ் கொன்றை, அரவு, சென்னி
முடித்தவன் காண்; மூ இலை நல் வேலினான் காண்;
முழங்கி உரும் எனத் தோன்றும் மழை ஆய் மின்னி
இடித்தவன் காண்; எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

9

வரும் தவன் காண்; மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன்
காண்; அஞ்சு எழுத்தும் நினைவார்க்கு என்றும்
மருந்து அவன் காண்; வான் பிணிகள் தீரும்
வண்ணம்; வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப்
பரந்தவன் காண்; படர் சடை எட்டு உடையான் தான்
காண்; பங்கயத்தோன் தன் சிரத்தை ஏந்தி, ஊர் ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

10

“வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்;
வேதத்தின் பொருளான் காண்” என்று இயம்பி,
விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்;
விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து
அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்;
அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

11

அறுத்தான் காண், அயன் சிரத்தை; அமரர் வேண்ட,
ஆழ்கடலின் நஞ்சு உண்டு, அங்கு அணி நீர்க்கங்கை
செறுத்தான் காண்; தேவர்க்கும் தேவன் தான் காண்;
திசை அனைத்தும் தொழுது ஏத்த, கலை மான் கையில்
பொறுத்தான் காண்; புகல் இடத்தை நலிய வந்து பொரு
கயிலை எடுத்தவன்தன் முடி, தோள்நால்-அஞ்சு,
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கச்சி ஏகம்பம்
வ.எண் பாடல்
1

உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க;
ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம்
விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்;
வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும்
திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

2

நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத
நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை-
வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான்
காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

3

பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும்
புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில்
மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான்
காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்-
பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

4

பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான்
காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற
சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும்
செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும்
பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன்
காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.

5

பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ
காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும்
மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண்,
வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்,
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

6

ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;
அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை;
காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்;
கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப்
பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர்
பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

7

உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண்,
உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்,
இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல்
பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண்,
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான்
காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

8

தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான்
காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண்,
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண்,
ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்,
வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண்,
வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

9

முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ
இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத்
தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை
காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன்
காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

10

பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான்
காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண்,
சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண்
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை
எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில்
இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன்,
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.