பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்
வ.எண் பாடல்
1

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

2

சந்தன களபம் துதைந்த நன்மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

3

கரியரே இடந்தான் : செய்யரே யொருபால் ;
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே; முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே; முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே; மறைகளுந் தேட
அரியரே; ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

4

பழையராந் தொண்டர்க் கெளியரே; மிண்டர்க்
கரியரே; பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
பிச்சரே; நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
குழகரே; ஒழுகுநீர்க் கங்கை
அழகரே; ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

5

பவளமே மகுடம் ; பவளமே திருவாய்;
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம்; தவளமே புரிநூல்;
தவளமே முறுவல்; ஆ டரவந்
துவளுமே; கலையும் துகிலுமே யொருபால்;
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே; ஆகில், அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

6

நீலமே கண்டம்; பவளமே திருவாய் ;
நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் ; நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ; ஒருவர்
கோலமே அச்சோ !அழகிதே யென்று
குழைவரே கண்டவர் ; உண்ட
தாலமே; ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

7

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
திறத்தவர் புறத்திருந் தலச,
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றோரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
புரியவும் வல்லரே; எல்லே
அக்கடா வாகில்; அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

8

மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான
விளக்கரே ; எழுதுகோல் வளையாள்
மையரே ; வையம் பலிதிரிந் துறையும்
மயானரே ; உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் ; கடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

9

குமுதமே திருவாய் ; குவளையே களமும் ;
குழையதே யிருசெவி ; ஒருபால்
விமலமே கலையும் உடையரே ; சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம் ;
கமலமே வதனம் ; கமலமே நயனம் ;
கனகமே திருவடி நிலை ; நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

10

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித் தெழுந்த சிந்தையரே

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
வ.எண் பாடல்
1

தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.

2

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.

3

திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய்வருந் தும்பிகாள், இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையுங் கொண்டுபோ துமினே.

4

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்;
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்;
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ;
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.

5

தோழி யாம் செய்த தொழில்என் எம்பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
கேழலும் புள்ளு மாகிநின் றிருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே.

6

என்செய்கோம் தோழி, தோழிநீ துணையா
இரவுபோம்; பகல்வரு மாகில்,
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண் டயர்வன்;
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே.

7

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.

8

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீ
றின்னகை மாலை கங்கைகொங் கிதழி
இளம்பிறை குழைவளர் இளமான
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

9

யாதுநீ நினைவ தெவரையா முடைய
தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தானே.

10

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்;
செய்வதென் ! தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே அறியும்என் மனமே.

11

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
வ.எண் பாடல்
1

புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே !
பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே.

2

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே !
முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே.

3

கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா ! பவளவாய் மணியே !
பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
கெளிமையோ பெருமையா வதுவே.

4

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே !மணியுமிழ்ந் தொளிரும்
பரமனே !பன்னகா பரணா !
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.

5

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
கென்னையாள் ஆண்ட நாயகனே !
முக்கணா யகனே! முழுதுல கிறைஞ்ச
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே

6

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே !
முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே !
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே

7

விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
பிழைபொறுத் தாண்டபே ரொளியே.

8

என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனியைஆ யினையே.

9

அம்பரா ! அனலா ! அனிலமே ! புவிநீ
அம்புவே ! இந்துவே ! இரவி
அம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயும்ஆ யினையே.

10

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவ ரெல்லாம்
சிவபதம குறுகிநின் றாரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
வ.எண் பாடல்
1

நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே !
ஆரோங்கிமுகம்மலர்ந்தாங்கருவினையேன்திறம்மறந்தின்
றூரோங்கும் பழிபாரா துன்பாலே விழுந்தொழிந்தேன் ;
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

2

நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் ? கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

3

அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள் மனத்தின்
முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் ;
வம்பளிந்த கனியே ! என் மருந்தே ! நல் வளர்முக்கட்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

4

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்த தியார்செய்தார் !
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

5

நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ;
ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

6

முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்
[முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் ; பயில்வதும்நின்
[னொருநாமம்;
அழுவதும்நின் திறம்நினைந்தே; அதுவன்றோபெறும்பேறு !
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய
[சுந்தரனே.

7

தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் ;
துஞ்சாகண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் ;
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே

8

அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய் ; நின்
[அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய் ; நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

9

ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி ; அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய
[சுந்தரனே

10

சரிந்ததுகில், தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல்
[இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும்
[வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

11

ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்
வ.எண் பாடல்
1

அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன் !
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா !
முக்கணா ! நாற்பெருந் தடந்தோட்
கன்னலே ! தேனே ! அமுதமே !கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

2

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா
ஓலம்என் றோலமிட் டொருநாள்
மண்ணின்நின் றலரேன் ; வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணிநின் றுருகேன் ; பணிசெயேன் எனினும்,
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின்நின் றகலான் என்கொலோ ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

3

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே ?
அன்பொடு தன்னை அஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும், பைம்பொன்மா ளிகையும்,
பவளவா யவர்பணை முலையும்,
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே .

4

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
அழகிய விழியும், வெண் ணீறும்,
சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல்
தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

5

சுருதிவா னவனாம் ! திருநெடு மாலாம் !
சுந்தர விசும்பின் இந்திரனாம் !
பருதிவா னவனாம் ! படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க் கமுதாம் !
எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம் ! பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

6

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி !
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

7

மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த
முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டங் குருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே ;
நிசிசரர் இருவரோ டொருவர்
காதலிற் பட்ட கருணையாய் ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

8

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்
டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்
கமருல களிக்கும்நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்தகங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே

9

பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

10

அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை ! மருங்கிற்
கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என் றவிர்சடை முடிமேற்
கங்கைகொண் டிருந்த கடவுளே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

11

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
வ.எண் பாடல்
1

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.

2

பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம்;
பட்டவர்த் தனம்எரு ; தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ;
மலைமகள் மகிழ்பெருந் தேவி ;
சாந்தமும் திருநீ ; றருமறை கீதம் ;
சடைமுடி ; சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் ; மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே,

3

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் ;
தொடர்வன மறைகள்நான் ; கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் ; போர்வை,
கவந்திகை கரியுரி ; திரிந்தூண் ;
தழலுமிழ் அரவம் கோவணம் ; பளிங்கு
சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.

4

பதிகம்நான் மறை ; தும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ;
கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
தமருகம் ; சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே .

5

திருமகன் முருகன் ; தேவியேல் உமையாள் ;
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் ; மாமனேல் இமவான் ;
மலையுடை யரையர்தம் பாவை
தருமலி வளனாம் ; சிவபுரன் ; தோழன்
தனபதி ; சாட்டியக் குடியார்
இருமுகம் ; கழல்மூன் ; றேழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே

6

அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
அம்பரா! அம்பரத் தளிக்கும்
கனகமே !வெள்ளிக் குன்றமே ! என்றன்
களைகணே ! களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே ! சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.

7

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
அத்தனே ! பித்தனே னுடைய
சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே !
சங்கரா ! சாட்டியக் குடியார்க்
கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே

8

செங்கணா ! போற்றி திசைமுகா போற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும
எங்கணா யகனே போற்றி ! ஏ ழிருக்கை
யிறைவனே போற்றியே ! போற்றி !

9

சித்தனே, அருளாய் ; செங்கணா, அருளாய் ;
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே, அருளாய் ; அமரனே, அருளாய் ;
அமரர்கள் அதிபனே, அருளாய் ;
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே, அருளாய் ; முதல்வனே அருளாய் ;
முன்னவா, துயர்கெடுத் தெனக்கே.

10

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
வளரொளி விளங்குவா னுலகே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்
வ.எண் பாடல்
1

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ !
அங்ஙனே யழகிதோ! அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

2

நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா ;
நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன வில்லை ;
மற்றெனக் குறவென் ! மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

3

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ ? கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

4

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

5

எவருமா மறைகள் எவையும்வா னவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவருமா லவனும் அறிவரும் பெருமை
அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

6

அருளுமா றருளி ஆளுமா றாள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ தழகோ !
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே

7

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப் பிலையுதிர் வென்றால்
நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்
நெஞ்சிடிந் துருகுவ தென்னோ !
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

8

பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

9

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார் ;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதி ரனையர் ; வா ழியரோ !
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

10

தனியர்எத் தனைஓ ராயிர வருமாந்
தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆ ரமிர்தர் ;
புனிதர்பொற் கழலர் ; புரிசடா மகுடர் ;
புண்ணியர் ; பொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

11

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
பொன்னெடுங் குன்றுடை யோரே.